யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மற்றும் கரிகணன் (தனியார்) நிறுவனமும் இணைந்து நடத்திய ஆடிப்பிறப்பு விழா-2017 17.07.2017 அன்று எமது மகாதேவா சிறுவர் இல்லத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவி பேராசிரியை திருமதி மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன்போது மங்கல விளக்கேற்றப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் கலந்து கொண்டிருந்த எமது இல்லத் தலைவர் உயர்திரு. தி. இராசநாயகம், பிரமுகர்கள் மற்றும் இல்லக் குழந்தைகளையும் படங்களில் காணலாம். வாழ்நாள் பேராசிரியர் (யாழ் பல்கலைக்கழகம்) திரு. அ. சண்முகதாஸ் அவர்கள் ஆடிப்பிறப்பு பற்றிய விரிவுரையை நிகழ்த்தினார். யாழ் போதனா மருத்துவமனை அத்தியட்சகர் டாக்டர் திரு. த. சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றிய நாவலர் பெருமானின் சிலை சகல பாடசாலைகளுக்கும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இச் சிலைகளை கரிகணன் நிறுவனத்தினர் அன்பளிப்புச் செய்திருந்தனர். இறுதியில் குழந்தைகளுக்கும் விருந்தினர்களுக்கும் கூழ், கொழுக்கட்டை வழங்கப்பட்டு விழா இனிதே இறை வணக்கத்துடன் நிறைவெய்தியது.